செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அருள்மிகு.சாந்தலிங்க அடிகளார் வரலாறு

அருள்மிகு சாந்தலிங்க அடிகள் திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி திருப்பேரூர் ஆதீனத்தின் ஆதிகுரு முதல்வராக விளங்கியவர். தொண்டை நாட்டில் தோன்றிய இவரது காலம் 17ஆம் நூற்றாண்டு என்பர். திருக்கயிலாயப் பரம்பரையில் சீரும்,சிறப்பும் பெற்ற திருவாவடுதுறை ஆதீனநிறுவனர் பஞ்சாக்கரதேசிகர் அவர்களின் மாணாக்கராகவும், அவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாகவும் விளங்கித் திருவண்ணாமலை ஆதீனத்தை நிறுவிய துறையூர் சிவப்பிரகாசரைக் குருவாகப்பெற்றவர் சாந்தலிங்கர்




தமிழகத்தில் அயலவர்தாக்கம் நுழைந்து பிறசமயங்களை வளர்க்கும் அமைப்புகள் தோன்றிய காலத்தில் சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்குரிய வழியினை அருளாளர்கள் மேற்கொண்டனர். அவ்வாறு தொடங்கப்பெற்ற மரபே “திருக்கயிலாயமரபு “ எனத்தோற்றம் பெற்றது.
கயிலைநாதரே இம்மரபுக்கு முதல்வர் ஆவார். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணாக்கராகிய நந்தியெம்பெருமானுக்கு அருளிச் செய்கிறார். அவ்வுண்மையினை நந்தியெம்பெருமான் தனது மாணாக்கர் சனற்குமாரமுனிவர்க்கு அருளிச் செய்தார். சனற்குமாரர் தமது முதல் மாணவராக விளங்கிய சத்திய ஞானதரிசினிகளுக்குச் செம்பொருளை அருளிச் செய்தார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தைப் பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபு “திருக்கயிலாய அகச்சந்தான மரபு ” எனப் போற்றப் பெறுகிறது.


இதனைத் தொடர்ந்து உருவாகிய புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார்.இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக்களப்பாளர் எனும் பெரியாருக்கு தோன்றியவர். இவரது இளமைப்பெயர் திருவெண்காட்டுநம்பி. குழந்தைப் பருவத்தில் சிறுதேர்உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் உண்மைப்பொருளை அகத்தால் இனிதுநோக்கி நம்பிக்கு அருளினார்.அன்றுமுதல் திருவெண்காட்டுநம்பி “மெய்கண்டார்” ஆனார்.
இவரது தத்துவஞானத்தையுணர்ந்த அச்சுதக்களப்பாளரின் குலகுரு சகலாகமபண்டிதர் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை அருளினார். அந்நூற்பொருளை எளிமைப்படுத்தி அருணந்தியார் சிவஞான சித்தியார் என்ற நூலை அருளினார். இவரின் மாணாக்கர் மறைஞான சம்பந்தர். இம்மறைஞான சம்பந்தரின் அருள்மாணாக்கர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை ( சித்தாந்த அட்டகம் ) அருளிய பெருமைக்குரியவர்.



இவர் வழிவந்த அருள்நமச்சிவாயரின் வழி மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாயமூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர். இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவப்பிரகாசர். இவரே தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசிந்தாந்தமரபில் தோற்றுவித்த பெருமைக்குரியவராவர். திருவண்ணாமலையிலும், துறையூரிலும் ஆதிசிவப்பிரகாசர் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயப்பணியாற்றி வந்தார். அக்காலத்தில் சாந்தலிங்கர் சிவப்பிரகாசரது தவவலிமையும்,அருட்பொலிவும் சீலத்தவரால் போற்றுவதைக் கேள்வியுற்றுத் திருவண்ணாமலைத் திருமடத்தை அணுகி குருநாதரை வணங்கி அவரைச் சிவமாகவே கண்டு வியந்தார். சிவப்பிரகாசர் சாந்தலிங்கரது நிலையுணர்ந்து “ வீரசைவ தீக்கை “ அளித்து தமக்கு அணுக்கராக ஏற்றுக்கொண்டார். அங்கு கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாசர் நட்பு சாந்தலிங்கருக்குக் கிட்டியது.
தனது குருநாதரின் அருட்கட்டளையின் வண்ணம் சாந்தலிங்கப் பெருமான் கொங்குவள நாட்டில் உள்ள பிறவாநெறித் தலமாகிய பேரூரை அடைந்து பட்டிப்பெருமான் திருவடிநிழலில் திருமடம் அமைத்து பல அருட்பணிகளை ஆற்றிவந்தார். பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட் குறிப்பின்படி சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையம்மையை சாந்தலிங்கர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சாந்தலிங்க சுவாமிகள் ஞானாம்பிகையாருடன் பேரூர்க்கு எழுந்தருளி திருமடத்திலிருந்து அடியவர்களுக்கு நல்வழி காட்டிவந்தார். ஞானாம்பிகையார் முதிர்ந்த அறிவோடு இல்லற நெறியில் நின்று அருட்பணிகளில் ஈடுபட்டார்.
சாந்தலிங்கப்பெருமான் மக்கள் உய்யும் பொருட்டுக் கொலைமறுத்தல், வைராக்கிய சதகம்,வைராக்கிய தீபம்,அவிரோத உந்தியார், என்னும் நூல்களை அருளிச்செய்தார். இவை முறையே சீவகாருணியத்தையும்,ஈசுவர பக்தியையும்,பாச வைராக்கியத்தையும்,பிரம்ம ஞானத்தையும் உணர்த்துவன.
மாணாக்கர் பலர் நம் குருமுதல்வர் துறவுநெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும்,அவற்றை நமக்குப் போதித்தும் தாம் மட்டும் இல்லறநெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். அதையுணர்ந்த அடிகள் ஒருநாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையாரை உடனிருத்திப் பாடம் சொன்னார். அப்போது சாந்தலிங்கரும் அம்மையாரும் மாணாக்கருக்கு கயிலைநாதரும்,உமையம்மையுமாக காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்ட மாணாக்கர் தாழ்ந்து பிழைபொறுக்க வேண்டினர். இந்நிகழ்வினையடுத்துச் சாந்தலிங்கர் முழுத்துறவு பூண விரும்பினார். இதற்கு இறைவனது திருவுள்ளக்குறிப்பையும் அறிய எண்ணினார். “இன்று யாம் திருவமுது ஏற்கப் புறப்படுகிறோம்,முதலில் பாலன்னம் கிடைக்குமானால் முழுத்துறவு நெறியில் நிற்ப்போம் ” என்கிறார். திருவருளும் அவ்வாறே இருந்தது. அன்றுமுதல் இல்லறம் நீங்கிய துறவியாகிறார். ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின்முகப்பில் பலருக்குக் குலதெய்வமாக விளங்குகிறது.
குமாரதேவர் எனும் கன்னடஅரசர் ஞானகுருவைத் தேடிப் பல தலங்களுக்கும் வந்தவர் திருப்பேரூரில் சாந்தலிங்கரைக் கண்டு உபதேசம் பெற விரும்பினார். அவருடைய பக்குவநிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளி தம்முடைய மாணாக்கராக்கிக் கொண்டார். பின் குமாரதேவர் குருவின் திருஉள்ளக்குறிப்பின்படிப் பல தலங்கட்கும் சென்றார். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில் ) பெரியநாயகியம்மையின் திருவருளால் மகாராசாதுறவு, சுத்தசாதகம் முதலிய பல சாத்திரங்களையும் அருளினார். திருமுதுகுன்றத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த குமாரதேவரின் திருவருளுக்கு ஆளானார் சிதம்பரதேசிகர் என்பார். அவரை குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்கப்பெருமானிடம் அழைத்துவந்தார். சிதம்பரசுவாமிகளின் மதிநுட்பத்தை உணர்ந்த சாந்தலிங்க அடிகள் தாமியற்றிய நூல்களுக்கு உரைசெய்யும்படி பணித்தார். சிதம்பர அடிகள் எழுதிய இவ்வுரை மெய்ப்பொருளை விளக்கும் வகையில் திட்பமும்,நுட்பமும் செறிந்து விளங்குகிறது. இச்சிதம்பர சுவாமிகள் சென்னைக்கருகிலுள்ள திருப்போரூர் என்னும் தலத்தினையடைந்து அங்கு மறைந்துகிடந்த முருகப்பெருமான் கோவிலைப் புதுப்பித்து வழிபாடு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். அவர் அருளிய பாடல்கள் “திருப்போரூர் சந்நிதிமுறை” என்று வழங்கப்படுகின்றன.
இறையருளோடு குருவருளும் பெற்று பல அடியார்களை உருவாக்கி வீரசைவ மரபைப் போற்றிவளர்த்த சாந்தலிங்கப்பெருமான் ஒரு மாசித்திங்கள் மகம் விண்மீன் கூடிய நிறைமதி நாளில் ஞானநிலை அடைந்து தாம் வழிபடும் கூத்தப்பெருமான் திருவடியில் கலந்தார். சாந்தலிங்கருடைய சமாதித் திருக்கோயிலும்,திருமடமும் கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள பேரூரில் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.

2 கருத்துகள்:

  1. இன்றுதான் உங்கள் வலை பக்கம் வந்தேன்
    மிக்க மகிழ்ச்சி!!

    . இனி தொடர்ந்து படிப்பேன்.
    பச்சை நாயகி

    பதிலளிநீக்கு
  2. அய்யா ,வணக்கம் .தங்கள் வலைத்தளம் மிக நன்று .தங்களின் மொபைல் எண்ணை அடியேனுக்கு SMS பண்ணுங்கள்.தங்களிடம் ஆன்மீக விஷயங்களை தெரிந்து கொள்வேன் .அடியேன்மொபைல்எண்:9840776195. by dr.siva.

    பதிலளிநீக்கு